திருச்சி :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கி, மரக்கடை பகுதியில் இன்று உரையாற்றினார். காலை 9:40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விஜயின் பிரச்சார வாகனம், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் கடுமையான தாமதத்தை சந்தித்தது. விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரையிலான 3 கி.மீ. பயணம் மட்டும் 2 மணி 45 நிமிடங்கள் ஆனது, மொத்தம் 5 மணி நேரம் ஆகியது.
தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வாகனத்தை புடைசூழ, போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. போலீஸ் அனுமதி 10:30 முதல் 11:00 மணி வரை 30 நிமிடங்கள் மட்டுமே என இருந்தாலும், தாமதத்தால் உரை நேரத்தை கடந்து நடைபெறுகிறது. பிரச்சாரத்தில் பேசிய அவர் ” அந்த காலத்தில் போருக்கு செல்பவர்கள் குலதெய்வகோவிலுக்கு சென்றுவிட்டு தான் போருக்கு செல்வார்களாம். அந்த மாதிரி அடித்தவருசம் நடக்க போகின்ற தேர்தலில் போட்டியிட தயாராவதற்கு முன்னதாக நம்ம மக்கள் எல்லாரையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணைத்தொட்டல் மிகவும் நல்லது.
சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மாதிரி தான் திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அறிஞர் அண்ணா அவர்கள் முதன் முதலாக தேர்தலை நிற்கவேண்டும் என்று விரும்பினார்.
அதன்பிறகு புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அவருடைய முதல் மாநாட்டை திருச்சியில் தான் நடத்தினார். அந்த மாதிரி திருச்சிக்கு என்று தனி வரலாறு அதிகமாக இருக்கிறது. அதற்கு பிறகு நம்மளுடைய கொள்கை தலைவர் பெரியார் அவர்கள் வாழ்ந்த இடம் மலைக்கோட்டை இருக்கும் இடம்..கல்விக்கு பெயர்போன இடம் மதசார்பினத்திற்கும் பெயர் பெற்ற இடம்” என தெரிவித்தார்.
அத்துடன் விஜய் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை கடுமையாக விமர்சித்தார். ‘மாணவர்களின் கல்விக் கடன் ரத்து’ என்ற வாக்குறுதி என்ன ஆனது? ‘டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு’ என அளித்த உத்தரவாதம் என்ன நிலை? ‘அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு’ என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை என விஜய் புகார் அளித்தார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
