இலங்கை கடற்படை சிறைபிடிப்பு : ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.!
இலங்கை கடற்படையால் 32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் எல்லை மீறும் இலங்கையை ஒன்றிய அரசு கண்டிப்பது இல்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் 32 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பால், 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையின் கைது நடவடிக்கையை தடுக்க ஒன்றிய அரசு நிரந்தர தீர்வை ஏற்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், போராட்டம் குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று மீனவர் சங்கங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிருந்தார். அதேபோல், ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.