பரந்தூர் விமான நிலைய திட்டம் – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகளும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே 2 முறை தீர்மானங்களை நிறைவேற்றி இருந்த நிலையில், நேற்று 3-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதுபோன்று விமான நிலையம் அமைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய விமான நிலைய திட்டத்துக்காக மொத்தம் 11 இடங்களை ஆய்வு செய்தோம். இதில் சிறந்த இடமாக பரந்தூரை தேர்வு செய்தோம். ஏனென்றால், அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு ஏதுவாகவும் தண்ணீர் வசதி, குறிப்பாக சவால்கள் குறைவாக இருந்தது. பரந்தூர் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம். 80% நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து ஒப்படைக்கப்பட்டது. உரிய இழப்பீடுகள் பரந்தூர் கிராம மக்களுக்கு நிச்சயம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், சென்னை மட்டுமின்றி திருச்சி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களிலும் விமான நிலைய விரிவாக்கம் நடைபெற உள்ளது எனவும் குறிப்பிட்டார்.