ஆவணங்களை சரிபார்க்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுமதி!

senthil balaji

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பிற்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு வாபஸ் பெறப்பட்டது. இதனால், வழக்கின் விசாரணையை வரும் ஜன.11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டது. மேலும், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3-வது முறையாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், ஆவணங்களை சரிபார்த்துக்கொள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்