சென்னை :கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டத்தில் திரண்ட அதிகப்படியான கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதனால் கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிஐ அதிகாரிகள் கரூரில் தனி அலுவலகம் அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன், சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் டிசம்பர் 29-ஆம் தேதி டெல்லி சிபிஐ தலைமையகத்தில் ஆஜராகினர்.விசாரணை 7 மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது. பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? அவர் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன? பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன செய்யப்பட்டன? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது? கூட்டத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது? போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த விசாரணை தவெகவுக்கு குறிப்பிடத்தக்க சட்டரீதியான சவாலாக உள்ளது. கட்சி தொடங்கப்பட்டு சில ஆண்டுகளே ஆன நிலையில் இத்தகைய சம்பவம் கட்சியின் அரசியல் பயணத்தை பாதிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். விசாரணைக்குப் பிறகு வழக்கு தொடர்பான மேலும் விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தவெக தலைமை இதுவரை இந்த விசாரணை குறித்து அதிகாரப்பூர்வ கருத்து தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுக்கூட்டங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை இது ஏற்படுத்தியுள்ளது.
