விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

வரும் மார்ச் 14ஆம் தேதி முதல் தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

TVK Leader Vijay - Y category security

சென்னை :தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தது. குறிப்பிட்ட மாத (3 மாதம்) இடைவெளியில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டம் நடத்தும். அப்போது அரசியல் தலைவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், புதியதாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தவெக தலைவர் விஜய்க்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.இதற்கான ஆலோசனை கூட்டமானது நடத்தப்படாமல் இருந்ததால் தற்போது வரையில் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, வரும் மார்ச் 14ஆம் தேதி இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் அப்போது காவல்துறை உயர் அதிகாரி, தலைமை செயலளர், விஜய் தரப்பு ஆகியோர் ஆலோசித்து விஜய் வீடு, கட்சி அலுவலகம், அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அளிப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அன்று முதலே விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. இதில் Y பிரிவு பாதுகாப்பில் 2 முதல் 4 துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை வீரர்கள், மற்றும் மாநில காவலர்கள் அடங்கிய 8 முதல் 11 பேர் அடங்கிய பாதுகாப்பு குழு 24*7 எனும் முறைப்படி சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு அளிப்பார்கள். பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் விஜய் வெளியில் செல்லும் போது பாதுகாப்பு பணியில் முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் எனவும் கூறப்படுகிறது.