அரசியல் என்ட்ரிக்கு ரெடியாகும் லாரன்ஸ்? திருச்சி கிழக்கில் த.வெ.க சார்பில் போட்டியா?

திருமாவளவன் மறுப்பைத் தொடர்ந்து, பிரபல நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், பின்னர் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. அந்த தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடலாம் என்ற தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு பரவின.

ஆனால், இதுகுறித்து சமீபத்தில் விளக்கம் அளித்த திருமாவளவன், திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையில் இணையுமாறு தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் அழைப்பு வந்ததாகவும், ஆனால் அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பில் யார் களமிறங்கப் போகிறார்கள் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த சூழலில், பிரபல நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ், தவெக வேட்பாளராக போட்டியிடலாம் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வருகிறது.

மேலும், அரசியலில் நேரடியாக களமிறங்குவது குறித்து தனது குருவான நடிகர் ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸ் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுவரை இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பிலோ அல்லது ராகவா லாரன்ஸ் தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அரசியலில் பிரபல நடிகர்களின் பெயர்கள் தேர்தல் காலங்களில் அடிக்கடி பேசப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், ராகவா லாரன்ஸ் பெயர் தற்போது தீவிரமாக அடிபடுவதால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவே நீடிக்கும் என கூறப்படுகிறது.