திருநெல்வேலி :மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு ஆகஸ்ட் 8, 2025 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கவினின் கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சரவணன், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்தும் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கவினின் உறவினர்கள் இன்னும் அவருடைய உடலை பெற்றுக்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 4-வது நாளாக கவினின் உறவினர்கள், தலித் உரிமை அமைப்புகள், மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சந்திரசேகர், “சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணவேணியை கைது செய்யாவிட்டால், கவினின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்,” என்று உறுதியாகக் கூறினார்.
இது குறித்து பேசிய அவர் ” என்னுடய மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் தந்தை மட்டும் தான் கைதாகி இருக்கிறார். இன்னும் அவருடைய மனைவி வேணியை கைது செய்யவில்லை. அவரையும் கைது செய்யுங்கள் நான் சட்டப்படி என்னுடைய மகனின் உடலை பெற்றுக்கொள்கிறேன். அப்படி கைது செய்யவில்லை என்றால் நான் நிச்சயமாக என்னுடைய மகனின் உடலை வாங்கவே மாட்டேன்” எனவும் உறுதியாக கூறினார்.
மேலும், இந்த பேச்சைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி, 24 மணி நேரத்திற்குள் கிருஷ்ணவேணியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, மறியல் போராட்டம் தற்காலிகமாக காலை 11:30 மணியளவில் வாபஸ் பெறப்பட்டது. அதே சமயம், நேற்று இந்தச் சம்பவம் தொடர்பாக கவினின் தந்தையை கைது செய்ததாகக் காவல்துறை தெரிவித்த நிலையில், கனிமொழி எம்.பி., மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
