பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

raguapathi

தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்றதில் இருந்து, அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு இயற்றும் மசோதாக்களுக்கு கையெழுத்து இடாமல் நிலுவையில் வைப்பது, அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பது கண்டத்துக்குரியதாக மாறியது. ஆளுநரின் செயலும் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார்.

சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தது. இந்த சூழலில், நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மிகுந்த பாதுகாப்பு இருக்கும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்பவரை உடனடியாக கைது செய்தனர். இவர் பெட்ரோல் குண்டு வீசுவதாக வாடிக்கையாக வைத்துள்ளார் என்றும் கடந்த ஆண்டு சென்னையில் பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் வீசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த பெட்ரோல் வீச்சு சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,  தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

ஒரு எதிர்க்கட்சி தலைவரை போல் ஊர், ஊராக சென்று பிரச்சாரம் செய்து வந்தார் ஆளுநர். ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளார். யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பாக முடியும். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கைதானவர் ஏற்கனவே சிறையில் இருந்துவிட்டு வந்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேறு யாரோ செய்த சதியாகவே கருதுகிறோம். தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை காட்டவில்லை. ஆளுநர் தான் தமிழ்நாட்டுக்கு மக்களிடம் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார். ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என போகிற போக்கில் சொல்லக்கூடாது. சாலையில் சென்றவர் பெட்ரோல் குண்டு வீசியதில் உளவுத்துறை தோல்வி என கூறுவது தவறு. ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. பெட்ரோல் குண்டு வீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது சாலையில் நடந்த சம்பவம். சாலையில் நடந்த சென்ற ஒருவர் வீசிய பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகை வாசலுக்கு கூட செல்லவில்லை. ஆளுநரை திமுக அரசு ஒருபோதும் அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. அவர் பேச்சுக்கு பதில் மட்டுமே அளிக்கிறோம். பெட்ரோல் குண்டு வீசியவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு.! காவல்துறை விளக்கம்.!

இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவம் குறித்து காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை மெயின் கேட் முன்பு பேரிகார்டு அருகில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். கைது செய்து செய்யப்பட்டுள்ள வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் கொண்டு வீசப்படவில்லை என விளக்கமளித்திருந்தார். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சுக்கும். ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்