மக்களே இங்கு செல்லாதீர்கள்....இரண்டு நாட்கள் தடை!

Devotees are not allowed to take a holy bath at the Thiruchendur Murugan Temple beach today and tomorrow.

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது.குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது,மீறினால் கைது செய்யப்படும் என்றும் தமிழக காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,நீண்ட தூர பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றும்,இன்று இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படவும் அனுமதி வழங்கப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

குறிப்பாக,சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும்,நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும்,புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.