தீபா வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி வந்த போலி அதிகாரி தப்பி ஓட்டம்!

Default Image

வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு வந்த போலி நபரை காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார்.

சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் தீபாவின் வீடு உள்ளது. இங்கு இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த நபர் சோதனைக்கு மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதற்கான அடையாள அட்டை சோதனை செய்வதற்கான வாரண்ட் போன்ற ஆவணங்களையும் அவர் வைத்திருந்தார். இதையடுத்து தீபா வீட்டில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற செய்தியாளர்களை அவர் சந்திக்க மறுத்தார். மேலும் வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களையும் அவர் கைகளால் தடுத்தார்.

இதனால் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தீபா வீட்டுத் தரப்பில் இருந்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தியாகராயநகர் உதவி ஆணையர் செல்வன், காவல் ஆய்வாளர் சேகர், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் 6 ஆண் போலீசார் 4 பெண் போலீசார் ஆகியோர் தீபா வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அந்த நபர் வைத்திருந்த அடையாள அட்டை வாரண்ட் போன்ற ஆவணங்களை வாங்கி சோதனை செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடீரென அவர் தீபா வீட்டின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து தப்பியோடினார்.

அவரை போலீசாரும் செய்தியாளர்களும் விரட்டிச் சென்றனர். உதவி ஆணையர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தும் தப்பிச் சென்ற போலி நபரை மடக்கிப்பிடிக்க முடியவில்லை. இதன் பின்னர் அந்த நபர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை மற்றும் வாரண்ட் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலிசார், சி.சி.டி.வி. காட்சிகளை எடுப்பதற்காக பார்த்த போது தீபா வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் சுவற்றை நோக்கி திருப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி வருமான வரித்துறை அதிகாரி அங்கு வந்த விவகாரத்தில் தீபாவின் கணவர் மாதவன் மற்றும் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வந்த நபர் மீது தனக்கு சந்தேகமே எழவில்லை என்று மாதவன் கூறியிருப்பதும் போலீசாரின் சந்தேகத்தை வலுவடையச் செய்துள்ளது.

அதிகாலை 5 மணிக்கே அந்த நபர் வந்த போதும் ஏன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகக் கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தீபாவின் வீட்டுக்கு பக்கத்து வீட்டு சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்