பயிர்க் கடன் தள்ளுபடி – விவசாயிகளுக்கு ரசீதை வழங்கி தொடங்கி வைத்தார் முதல்வர்

Chief Minister Palanisamy today started issuing crop loan waiver receipts to farmers.

சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கி இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி  செய்யப்படுவதாக கடந்த 5ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் கூறிருந்தார்.

பயிர் கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேற்று பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதன்பிறகு தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்த ரசீது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.