சென்னை :கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர். காலை முதல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இரவு கரூர் புறநகரில் வைத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 5 பிரிவுகளின் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தவெக மா.செ. மதியழகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டு அதை டெலீட் செய்திருக்கிறார்.
ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக போலீஸ் மாறினால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரேவழி என குறிப்பிட்ட அவர், நேபாளத்தில் நடந்த gen z போராட்டம் போல இங்கும் நிகழும் என பதிவிட்டிருந்தார். மேலும், அதுவே ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், உடனே அதை டெலீட் செய்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது பதிவில், ”சாலையில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
unknown node