நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம்.! NEET,JEE தேர்வுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து.!

நீட் , ஜேஇஇ தேர்வை நடத்துவது குறித்து அரசு, மாணவர்களிடம் கேட்டு ஒருமித்த கருத்தினை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வை செப்டம்பர் மாதம் நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாங்கத்தின் தோல்விகள் காரணமாக நீட், ஜேஇஇ தேர்வு எழுதுபவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் கூடாது என காங்கிரசின் முன்னால் தலைவரான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டரில் வீடியோ பதிவை போட்டுள்ளார். அதில், நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம், நீங்கள் மாணவர்கள், நீங்கள் இந்த நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறீர்கள். இப்படி இருக்கையில், எனக்குப் புரியாதது என்னவென்றால், நீங்கள் ஏன் அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏன் உங்கள் மீது மேலும் திணிக்கப்படும் வலிகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்? என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அரசு, மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியது. 6 மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர்கள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். ஆனால் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறியுள்ளது.
NEET-JEE aspirants’ safety should not compromised due to the failures of the Govt.
Govt must listen to all stakeholders and arrive at a consensus.#SpeakUpForStudentSafety pic.twitter.com/Y1CwfMhtHf
— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2020