பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை – ரகுராம் ராஜன்

Default Image

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் தேவை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று காணொலிக்காட்சி மூலம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை தொடர்பான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்தில் வைத்திருப்பது எளிது என்றும், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது எனவும் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கொரோனாவால் அமலில் இருக்கும் பொதுமுடக்கத்தை தளர்த்துவதில் அரசு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும் நீண்ட நாட்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், ஊரடங்கால் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நாம் படிப்படியாக தளர்த்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது யாராவது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருவதால், மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வு செய்யப்படுமா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதியில் தளர்வு செய்யப்படும் என்றும் மறுபக்கம் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ மே 3 க்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை குறித்து ஓர் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்