பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி, செப்.13ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மேலும் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரின் தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மீதான விசாரணை நடந்து வருகிறது.
பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக மத்திய அரசிடம் விசாரணை நடத்த கோரி, பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.
அதன்படி, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெகாசஸ் தொடர்பான வழக்கில் மேலும் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதற்கு சில அதிகாரிகளை சந்திக்க முடியாததால், அந்தப் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனால் எங்களுக்கு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரியிருந்த நிலையில், பெகாசஸ் உளவு தொடர்பான மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை செப்.13ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.