டெல்லி :முதலமைச்சர் ரேகா குப்தாவை, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த ‘ஜன் சுன்வை’ (பொது மக்கள் குறைதீர்க்கும்) நிகழ்ச்சியின்போது தாக்கிய நபர், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 41 வயது ராஜேஷ் பாய் கிம்ஜி பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது அடையாளம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை உறுதிப்படுத்த, டெல்லி காவல்துறை குஜராத் காவல்துறையிடம் உதவி கோரியுள்ளது.
தாக்குதல் நடந்த உடனேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட சகாரியா, தற்போது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில், அவர் தனது உறவினர் ஒருவர் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என கோரி, நீதிமன்ற ஆவணங்களுடன் முதலமைச்சரை சந்திக்க வந்ததாகவும், ஆனால் தாக்குதலுக்கான உறுதியான நோக்கம் இன்னும் தெளிவாகவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ராஜேஷ் சகாரியாவின் தாயார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தெரு நாய்கள் தொடர்பான தீர்ப்பால் (நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றுவது) மனமுடைந்து இந்த செயலை செய்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவர் முன்பு தனியாக டெல்லிக்கு பயணித்திருப்பதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். சம்பவத்திற்கு பின்னர், முதலமைச்சரின் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, டெல்லி காவல் ஆணையர் எஸ்.பி.கே. சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதல், முதலமைச்சரின் Z-பிளஸ் பாதுகாப்பு இருந்தபோதிலும் நடந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதலமைச்சர் ரேகா குப்தா, லேசான தலை காயத்துடன் உள்ளதாகவும், ஆனால் நிலையாக இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிசோதித்து உறுதிப்படுத்தியதாகவும் டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர், மேலும் குற்றவாளிக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
