சாத்தான்குளம் தந்தை -மகன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை உறுதி என்று சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன்களான ஜெயராஜூம், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலைசெய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் காவலர் முத்துராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்படுவர். விசாரணைக்கு பிறகே வேறு சிலரை கைது செய்வதை பற்றி தெரியவரும் .சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள், ஆவணங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.