என்றும் 'ராஜா' ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!

லண்டன் அப்பல்லோ அரங்கில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா.

ilaiyaraaja symphony london

லண்டன்: 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட கனவை நிறைவேற்றம் செய்துள்ளார். லண்டன் அரங்கில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்ய வேண்டும் எனபதே அவரது நீண்ட வருட கனவு.

ஆர்கெஸ்டரா என்பது பல்வேறு இசைக்கருவிகள் கொண்டு இசைகோர்வை அமைக்கும் பணியாகும். அதனை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் செய்வார்கள். ஆனால் சிம்பொனி இசை என்பது குறிப்பிட்ட 3, 4 இசைக்கருவிகள் கொண்டு 50க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுக்கு தனித்தனியாக இசைகோர்வை குறிப்புகள் எழுதி கொடுத்து அதனை அதற்கென இருக்கும் சிம்பொனி அரங்கில் சரியாக கோர்த்து இசையை வார்ப்பதாகும். இதற்கு முன்னர் மொஸார்ட், பீத்தோவன் உள்ளிட்ட இசையுலக ஜாம்பவான்கள் அரங்கேற்றிய நிகழ்வு இது.

இந்த சிம்பொனி இசையை தற்போது ராஜா தன்வசமாகியுள்ளார். தனது இசை எழுத்தில் ‘வேலியண்ட்’ எனும் முதல் சிம்பொனி இசை கோர்ப்புகளை வெறும் 35 நாட்களில் எழுதி முடித்துள்ளார்.  அதனை லண்டனில் உள்ள புகழ்பெற்ற ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து தனது முதல் சிம்பொனி இசையை லண்டன் ஈவென்ட்டிம் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

இந்திய நேரப்பபடி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சிம்பொனி இசை நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் இளையராஜா மகன்களும் இசையமைப்பாளர்களுமான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பாலிவுட் இயக்குனர் பால்கி என பலரும் கலந்து கொண்டனர். ஈவென்ட்டிம் அப்பல்லோ அரங்கில் 3500 இருக்கைகளும் நிரம்பி விட்டன. சிம்பொனி இசையை அரங்கேற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இளையராஜா.

சிம்பொனி இசையை வெற்றிகரமாக நடத்திவிட்டு, சிம்பொனியை நிகழ்த்தியதை எனது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனை அனுபவித்தால் தான் புரியும்.அதனை இன்று நீங்கள் முதல் முறையாக அனுபவித்திருக்கிறீர்கள் என உணர்ச்சி பொங்க விழா மேடையில் பேசினார் இசைஞானி இளையராஜா.