பாரிஸ் ஒலிம்பிக் :பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் தற்போது வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்த 2024 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பதக்கத்தை பதிவு செய்ததுடன், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்தி காட்டி இருக்கிறார் மனு பாக்கர். மேலும், 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் கொரியா நாட்டை சேர்ந்த ஓ ஜின் தங்க பதக்கமும், அதே கொரியா நாட்டை சேர்ந்த கிம் யேஜி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.
தற்போது, இந்தியாவுக்காக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக வீராங்கனை மனு பாக்கருக்கு இந்திய மக்கள் இணையத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
unknown node