பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.நாளை பீகாரில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடையும் சூழலில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், நாளை நடைபெற உள்ளது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்தது.
இந்நிலையில் 2ம்கட்ட தேர்தல் 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 94 சட்டசபை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.குறிப்பிடப்பட்ட இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர்களும் பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர்களும் அதில் திருநங்கையர் 980 பேரும் உள்ளனர்.2ம்கட்ட தேர்தலுக்காக 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்வேட்பாளர்கள் மற்றும் 146 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும்,தராலிதனி தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், மற்றும் அவரது சகோதரர் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். இவர்களுடன் முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.