திரிணாமுல் காங்.கின் மூத்த தலைவர் சுப்ரதா முகர்ஜி மறைவு-மே.வங்க முதல்வர் மம்தா இரங்கல்!..

Subrata Mukherjee, senior leader of the West Bengal Trinamool Congress, passed away last night due to chest pain.

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு காலமானார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மேற்கு வங்க அரசின் கேபினட் அமைச்சராகவும், மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய சுப்ரதா முகர்ஜிக்கு வயது 75.அவருக்கு அக்டோபர் 24 அன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்தும்,நெஞ்சுவலி காரணமாகவும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.22 மணியளவில் அவர் காலமானார்.

பெர்குடேனியஸ் கரோனரி என்ற அபாயகரமான சிக்கல்களில் ஒன்றான ‘ஸ்டென்ட் த்ரோம்போசிஸ்’ அமைச்சருக்கு இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனையடுத்து,மருத்துவமனைக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து கூறுகையில்:”சுப்ரதா முகர்ஜி எங்களுடன் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள கட்சித் தலைவராக இருந்தார். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு”,என்று கூறினார்.

பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல்,அரசுக்குச் சொந்தமான ரவீந்திர சதனுக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து, அது அவரது பாலிகஞ்ச் வீட்டிற்கும் பின்னர் அவரது பூர்வீக வீட்டிற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

சுப்ரதா முகர்ஜி,மேற்கு வங்கத்தில் நாரதா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தியது.அப்போது,போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்ற காட்சியை நாரதா நிறுவனம் வெளிக்கொண்டு வந்தது.இதனையடுத்து,இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்ட 4 பேரை குற்றவாளியாக அறிவித்த நிலையில், சுப்ரதா முகர்ஜி சிறை சென்று ஜாமீனில் வெளிவந்தார்.

சுப்ரதா முகர்ஜி,2000 முதல் 2005 வரை கொல்கத்தாவின் 36-வது மேயராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.