அதிமுகவுடன் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் – ஜெயக்குமார்

Former minister Jayakumar is confident that the AIADMK-led alliance will win a landslide victory in the local body elections.

அதிமுக தலையிலான கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சமயத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேர்தல் வியூகங்கள்,  கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு மக்கள் மகத்தான வெற்றியை பரிசளிப்பார்கள். திமுக அரசு கடந்த 8 மாதங்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என குற்றசாட்டினார்.

எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எல்லாம் காத்தில் பறக்கவிட்டு, சட்டம் – ஒழுங்கு பிரச்சனை சீர்குலைந்து உள்ள நிலையில், காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தார். திமுக அரசு அதிவேகமாக மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது. மேலும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.