#Breaking:வன்னியர் இட ஒதுக்கீடு;அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi has said that the TN govt will appeal to the Supreme Court regarding the cancellation of the Vanniyar reservation.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்தானது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க அரசு அளித்தது.

ஆனால்,வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில்,சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.

அதன்பின்னர்,வன்னியர் சமூகத்தினருக்கான 10.5% இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு அளித்தனர்.இதனையடுத்து,நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்நிலையில்,வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தானது தொடர்பாக அரசு மேல்முறையீடு செய்யும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:

“நவம்பர் மாதம் நெட் தேர்வு மற்றும் வங்கி தேர்வுகள் நடைபெறுவதால், பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும்.அதற்காக,தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும்,வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும். அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவைப் பொறுத்து 10.5% இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கான நிலை தெரிய வரும்”,என்று கூறியுள்ளார்.