"ஜனவரி 22-ல் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்" – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Mega vaccination camp at 50,000 places on January 22 "- Minister Ma Subramanian's announcement!

சென்னை:ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில்,பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.அதே சமயம்,15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு பள்ளிகளில் மட்டுமே தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,இவர்களும் இனி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து,ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 1,91,902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.அதில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.மாநிலம் முழுவதும் 8,912 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஒமைக்ரான் தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.ஏனெனில்,2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இறப்பு நிலைக்கு செல்லவில்லை. ஜனவரி 22 ஆம் தேதி தமிழகத்தில் 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.எனவே,தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோர்கள்,இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும்,கொண்டாட்டங்களை தாண்டி உயிர் முக்கியம் எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.