விரைவில் உள்ளாட்சி தேர்தல் – மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நடத்தப்படமாட்டாது!

Information on the Home Department Policy Note that local elections will be held soon in the missing districts.

விடுபட்ட மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.

தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரில் உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில், புதிதான உருவான மற்றும் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டது என்றும் இதனால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது.

செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.