சட்டப்பேரவை: பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீது 2-ஆம் நாள் விவாதம்!

The Tamil Nadu Legislative Assembly is scheduled to hold a second day debate on the General Budget and the Agriculture Budget.

தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனைத்தொடர்ந்து, நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று கூடி இருக்கும் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பதில் அளிக்கின்றனர். அதிமுக சார்பில் எஸ்பி வேலுமணி, சம்பத்குமார் ஆகியோர் பட்ஜெட் விவாதத்தில் பேசவுள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி விவாதத்தில் பேசவுள்ளதால், டெண்டர் முறைகேடு புகார் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய சட்டப்பேரவையில் கரும்புக்கான ஆதார விலை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட் உரை மீதான விவாதம் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.