வார்த்தைகள் அளந்து பேசாமல் இருந்தால் அதற்குரிய பதிலடி கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Fisheries Minister Jayakumar has said that LK Sudesh should speak as a mature politician.

பக்குவப்பட்ட அரசியல்வாதியாக எல்.கே.சுதீஷ் பேசவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய எல்.கே.சுதீஷ், நாங்கள் கேட்ட தொகுதிகளும், எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை சந்தித்து டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் அதிமுகவின் கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு செயல்படவில்லை, பாமாவிற்கு ஸ்லீப்பர்செல்லாக இருந்து கொண்டு கொள்கை பரப்பு செயலாளராக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என எல்.கே.சுதீஷ் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிஷ்டவசமானது. பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது தேமுதிக சேற்றை வாரி இறைக்க கூடாது. நன்றி மறந்து தேமுதிக பேசக்கூடாது, பிடிக்கவில்லை என்றால் நண்பர்களைப் போல கைகுலுக்கி பிரிந்துவிட வேண்டும்.

எல்.கே.சுதீஷின் கருத்து தமிழக மக்கள் சிரிக்க கூடிய வகையில் தான் இருக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிதான் அமையும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் வெறுப்பின் உச்சகட்டமாக, கூறியுள்ளார். ஆத்திரத்தில் விடும் வார்த்தைகளை திரும்ப வாங்க முடியாது, அந்த பக்குவம் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும். நிச்சயம் அவருக்கு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

வார்த்தைகள் அளந்து பேசாமல் இருந்தால், அதற்குரிய பதிலடி கிடைக்கும். எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கூறியுள்ளார். பலம், பலவீனத்தை அடிப்படையாக கொண்டுதான் தொகுதிகள் ஒதுக்கப்படும். அதன்படி தான் தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்களுக்குத்தான் பாதிப்பு. தேமுதிகவுக்கு அரசியலில் அங்கீகாரம் கொடுத்தது அதிமுகத்தான் என குறிப்பிட்டுள்ளார்.