5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:
“2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 5 பவுன் வரை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த, இப்போதைய முதலமைச்சரும், அவரது மகனும் மேடைதோறும் பேசினார்கள். அவர்களின் பேச்சை நம்பி சுமார் 48 லட்சத்து 85 ஆயிரம் நபர்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்கள்.
ஆனால், இந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் நகைக் கடன் தள்ளுபடிக்கு புதிய நிபந்தனைகளை விதித்தது. இந்தப் புதிய நிபந்தனைகளின்படி சுமார் 35 லட்சத்து 38 ஆயிரம் நபர்கள் நகைக் கடன் தள்ளுபடிக்கான தகுதியினைப் பெறவில்லை என்றும், சுமார் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது.
ஆனால்,அப்பணத்தைத் தராமல், அந்தந்த சங்கங்களில் உள்ள வைப்பு நிதியினை, நகைக் கடன் தள்ளுபடிக்கும், அன்றாட பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை வழங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன.
இதனால், கூட்டுறவு கடன் சங்கங்களே இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியது.எனவே,ஐந்து பவுன் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்த சுமார் 4,450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, அச்சங்கங்கள் தள்ளுபடி செய்த தொகையினை உடனடியாக வழங்கவும், மேலும் அச்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
unknown node