கிரிப்டோகரன்சியால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை

உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது.

இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் என்று நான் நினைக்கிறேன். இதனால்,தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கட்டுப்பாடு மிகவும் திறமையானதாக இருக்க வேண்டும்”,என்று பேசினார்.

மேலும்,டிஜிட்டல் உலகில் இந்தியாவின் செயல்திறன் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிகளை சீதாராமன் எடுத்துரைத்தார்,கொரோனா தொற்றுநோய்களின் போது இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டு விகிதம் அதிகரித்ததை வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக,மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசுகையில்:”கிரிப்டோகரன்சி அல்லது பிளாக்செயின் மற்றும் ஃபின்டெக் என்று வரும்போது இந்தியா அனைத்து விருப்பங்களையும் நிறுத்தவில்லை.இந்தியாவில் கிரிப்டோகரன்சி விதிமுறைகளை உருவாக்குவது குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கும் இந்த விஷயத்தில் அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது”,என்று கூறியிருந்தார்.

மேலும்,2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செயல்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.