அதிமுகவுடன் தொடர்ந்து இழுபறி – இன்று இறுதியாகும் தொகுதி பங்கீடு – ஜிகே வாசன்

GK Vasan is holding consultations with executives at the Tamil State Congress party office in Alwarpet, Chennai.

சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக 3 முதல் 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஜிகே வாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவுடன் இன்று தொகுதி பங்கீடு இறுதியாகும் என்றும் தமாகாவுடன் அதிமுக பேசுவதில் எந்தவித தயக்கமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற மூலம் தனி சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம் என கூறியுள்ளார். வெற்றி கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தமளிக்கிறது என்றும் தெரிவித்தார். இன்று மாலை அதிமுகவுடன் தமாகா மீண்டும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. இதன்பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.