தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை பேச்சு.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். புதிய தலைவராக நியமித்ததை அடுத்து, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில், வரும் 16ம் தேதி, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை ஈரோடு குமலன்குட்டை பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது தொண்டர்கள் மத்திய பேசிய அண்ணாமலை, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கட்சியில் எனக்கு பதவி வழங்கப்பட்டது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், வருங்காலமென்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் காலமாக அமையும்.
கட்சியின் கொள்கையை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அதிகளவு இருப்பதால் கட்சியின் மிகப்பெரிய வளர்ச்சி இங்கு இருக்கும். அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குழுவாக செயல்படுவதுதான் என்னுடைய முதல் வேலையாக இருக்கும். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என கூறி, 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த 150 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்துக்குள் நுழைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
unknown node