ஐநா பொது அவையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரைக்கு கடும் எதிர்ப்பு.!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றுவதை புறக்கணித்து ஐநா சபை உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Netanyahu

இஸ்ரேல் :இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுஐரோப்பிய யூனியன் நாடுகளின் வான்வெளியை தவிர்த்து மத்திய தரைக்கடல் வழியே அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்றுள்ளார். காசாவில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக கைது வாரண்டு அமலில் இருப்பதால் கைதாவதில் இருந்து தப்பிக்க, நெதன்யாகு விமானம் புதிய வழித்தடத்தில் பறந்துள்ளது.

தங்கள் நாட்டிற்கு நெதன்யாகு வந்தால் அவரை கைது செய்வோம் என அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் அறிவித்துள்ளதால், அந்த நாடுகளின் வான்வெளி தவிர்த்துள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஆற்றிய உரையில், ”ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், இஸ்ரேல், அமெரிக்க பாதுகாப்புக்கு ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது.

காசாவில் சிக்கி இருக்கும் பிணை கைதிகளை இஸ்ரேல் மறக்கவில்லை, வெளியில் கண்டனம் தெரிவிக்கும் தலைவர்கள் மறைவாக நன்றி கூறுகின்றனர். பாலஸ்தீனத்தை ஆதரித்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம், பிணை கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும், காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்”என்றார்.

இதனிடையே, பொதுச் சபையில் நெதன்யாகு தனது உரையைத் தொடங்குவதற்கு சற்று முன்பு டஜன் கணக்கான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மண்டபத்திலிருந்து வெளியேறினர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் உலகத் தலைவர்களின் கூட்டத்திலிருந்து இஸ்ரேலின் சமீபத்திய பொது எதிர்ப்பு இதுவாகும். இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் பிரதிநிதிகள் எழுந்து நின்று நெதன்யாகுவுக்கு ஆதரவாக கைதட்டினர்.