மாஸ்கோ :ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த சூழலில் இந்தியாவின் உயர் வரி விதிப்பு மற்றும் ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரி தொடர்பான பிரச்சினைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்பிடம், இந்தியா மீது 50 சதவீத வரியை அறிவித்த பிறகு வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, “இந்தப் பிரச்சினையை நாங்கள் தீர்க்கும் வரை அது நடக்காது” என்று டிரம்ப் கூறினார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இது வருகிறது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்து, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது, மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதல் 25% வரி விதிக்கப்பட்டு, மொத்தம் 50% வரியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நடந்து வந்தாலும், உடன்பாடு எட்டப்படவில்லை. டிரம்ப், இந்தியாவின் அதிக வரி விதிப்பு மற்றும் ரஷ்யாவுடனான எரிசக்தி வர்த்தகத்தை காரணம் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் நடவடிக்கைகளை “நியாயமற்றது” என விமர்சித்து, தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
