அஜர்பைஜான் குற்றச்சாட்டு – ஈரான் ட்ரோன் தாக்குதல்!

நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு பள்ளி அருகே நடந்த தாக்குதலில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

Middle East Conflict

அஜர்பைஜான் :மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. நக்சிவன் சுயாட்சி பிராந்தியத்தில் உள்ள நக்சிவன் சர்வதேச விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள ஒரு பள்ளி அருகே இரண்டு ஈரானிய ட்ரோன்கள் எல்லையைத் தாண்டி வந்து விழுந்ததாக அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விமான நிலைய டெர்மினல் கட்டிடத்தில் ஒரு ட்ரோன் விழுந்ததால் தீப்பிடித்தது மற்றும் டெர்மினல் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும், மற்றொரு ட்ரோன் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள பள்ளி அருகே விழுந்ததாகவும் அஜர்பைஜான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோக்களில் விமான நிலையத்தில் கருப்பு புகை எழுவது மற்றும் உட்புற சேதங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம், “இது அஜர்பைஜான் இறையாண்மைக்கு எதிரானது மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளை மீறுவது. இது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் தூதரகத்திற்கு உடனடியாக எதிர்ப்பு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் ஈரான் தூதரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. “இந்த சம்பவத்தை உடனடியாக விளக்க வேண்டும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளது. இல்லையென்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா போர் பதற்றத்தின் போது ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அஜர்பைஜான் – ஈரான் இடையேயான உறவு ஏற்கனவே பதற்றமான நிலையில் இருந்த நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.