கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை தனது தந்ததால் குத்தி உடைத்துள்ளது. இதனால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் யானையை கண்டு பயந்து நடுங்கியுள்ளனர்.
ஆனால், ஓட்டுநர் அந்நேரத்தில் பயப்படாமல் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இருந்துள்ளார். இதன் பின்னர் காட்டுயானையும் அங்கிருந்து சென்றுள்ளது. இந்த காட்சிகளை பேருந்தின் உள்ளே இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
unknown node