மக்களே தடுப்பூசி போடுங்க...இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

The 13th mega vaccination camp is being held today (Saturday) in 50,000 places across Tamil Nadu.

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 50 ஆயிரம் இடங்களில்,13 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையாய் அதிகரிக்கும் விதமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி முகாம் வரும் காலங்களில் சனிக்கிழமைகள் தோறும் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.இந்த முடிவு மருத்துவ பணியாளர் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி ஒமைக்ரானை ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில்,அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய,மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 13 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. அதன்படி,காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுவுள்ளது.குறிப்பாக,சென்னையில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில்  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

எனவே,அரசு தடுப்பூசி மையம்,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு சென்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும்,அவ்வாறு செலுத்தி கால அவகாசம் முடிந்தவர்களும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும், இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.