கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Tamilisai Soundararajan

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது.

இதனால் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என வாக்காளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்து இருக்கிறது. தேர்தலை சுமுகமாக முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆனால், பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது என்பது வருத்தம் அளிக்கிறது.

தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது என்பது வேதனையான உண்மை. கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இன்னும் தீவிரமாக இதை கண்காணித்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு வாக்காளருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டாலும் அது ஜனநாயகத்தில் சரியில்லை என்பது தான் எங்களது வாதம். மேலும் இந்த விவகாரத்தில் திமுக அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்