சென்னை :அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2.20.94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும். பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இலவச வேட்டி சேலைகளை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
unknown node