விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும்?.. அனைவரும் தயாராக இருக்க வேண்டும் – ஈபிஸ்

நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தகவல்.

நாடாளுமன்ற தேர்தலின்போது சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தகவல்.

சேலம், ஓமலூரில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரம் குறித்து இன்னும் திட்டமிடவில்லை. 9 மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம். முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்று தெளிவாக இல்லை என்றார்.

வங்கி கடனில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை தேவை என்றும் கூறினார். திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை என்றும் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர் எனவும் விமர்சித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், 2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம், இதனால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் இதனால் சட்டமன்ற தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் என்றும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.