பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு..!

Prakash, an army soldier from Tamil Nadu, was dead in an avalanche on the Indo-China border.

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி  தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரகாஷ் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்தில் சேர்ந்த ‘கோர் ஆப் சிக்னல்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப பிரிவில்  ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ராணுவ வீரர் பிரகாஷ் இந்தியா- சீனா எல்லையின் ‘கேங்டாக் சிக்கிம்’ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி கடந்த 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,பனிப்பிரதேசம்  என்பதால் உடலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று விமானம் மூலம் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணுவ வீரர் பிரகாஷூக்கு திருமணமாகி 2 வயது மகனும் உள்ளார். மேலும்,பிரகாஷின் 2வது தங்கை மஞ்சுளாவிற்கு வரும் மே 23 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.இதனால்,அடுத்த வாரம் சொந்த ஊருக்கு  வருவார் என குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ராணுவ வீரர் பிரகாஷ் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு  குடும்பத்தினரும்,கிராம மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.