இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
மதுரை அருகே இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியது
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாலை 5 முதல் 6 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வழிபாட்டு மையமான சிக்கந்தர் பாதுஷா தர்காவில் வழக்கம்போல் கந்தூரி நிகழ்வு நடைபெறுவதை எதிர்த்து, இந்துமுன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்த முன் வந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
போராட்டத்தில் இந்து முன்னணியினர் தவிர மற்ற சில இந்து அமைப்புகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் போராட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும், போராட்டம் நடத்துவதற்கோ, கூட்டம் கூடுவதற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால், இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கவும் செய்திருந்தார்கள்.
இதனையடுத்து தற்போது, போராட்டம் நடத்திக்கொள்ள கோரப்பட்ட மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மதுரை அருகே இந்து முன்னணி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியது. உத்தரவின் படி, பழங்காநத்தத்தில் இன்று மாலை 5 – 6 மணி வரை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் எனவும், பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது, கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனைகளையும் வழங்கியுள்ளது. போராட்டம் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கியுள்ளது.