பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம்!

கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நியமனம் செய்வதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Arul Ramadas

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள், இன்று முதல் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியால் வெளியிடப்பட்டது.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் கட்சி தொடர்பான தகவல்களுக்கு அருளுடன் தொடர்பு கொள்ளுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் கட்சி பொறுப்பாளர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நியமனம், பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல்களின் பின்னணியில் நடைபெற்றுள்ளது. முன்னதாக, அன்புமணி தலைமையிலான அணி, கட்சி ஒழுங்கை மீறியதாகக் கூறி அருளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்திருந்தது.

ஆனால், ராமதாஸ் ஆதரவு அணி, அருளை மாநில இணைப் பொதுச் செயலாளராக நியமித்து, அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியது. இந்தப் புதிய நியமனம், கட்சிக்குள் இரு தரப்புகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.