சென்னையில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான இடமில்லை என ஆளுநர் ரவி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

சென்னை : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னைக்கு வருகை தந்த நிலையில், குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து,விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது செய்தியாளர் ஒருவர் ” ஆளுநர் ரவி சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியிருக்கிறார் அது குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன் ” ஆளுநர் ரவி தெரியாம செல்கிறார். இல்லையென்றால் தெரிஞ்சும் தெரியாமலும் சொல்கிறார் என்று வைத்து கொள்ளலாம். பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் அவருக்கு தெரியும்.
சென்னை என்பது ஒரு பாதுகாப்பான இடம் தான். வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய மாணவிகள் கூட இங்கு வந்து படிக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் பலரும் இங்கு வருகை தந்து படிக்கிறார்கள். எனவே, ஒரு சில நிகழ்வுகளை வைத்து பேசக்கூடாது. பிற மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் மறைக்க படுகிறது. நடந்த தகவல் வெளிவருவது இல்லை. இங்கு பத்திரிகையாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதால் விஷயங்கள் வெளிய வந்துவிடுகிறது. எனவே அவர் தெரியாமல் இப்படி கூறலாம்” எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விகள் எழுப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் ” நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன் ” பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பெண்கள் தானாகவே முன் வந்து புகார் அளிக்கிறார்கள். அதனைப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் இடங்களில் பெண்ணின் பெற்றோர்கள் இதனை வெளியே சொன்னால் நம்மளுடைய குடும்ப பெயர் கெட்டுபோய்விடும் என்ற காலம் தான் இருந்தது. இப்பொது அது மாறிவிட்டது.
பெண்களும் சரி, சிறியவர்களுக்கு சரி உடனடியாக புகார் அளிக்க முன் வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் முன் வர காரணமே ஊடகங்கள் மற்றும் நாங்கள் கொடுத்த விழ்ப்புணர்வு தான். தொடர்ச்சியாக இதற்கான விழிப்புணர்வை காவல்துறை உதவியுடன் நாங்கள் செய்துகொண்டே இருப்போம்” எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.