நெல் குவிண்டாலுக்கு ரூ,1,888 உயர்த்தி-அரசு உத்தரவு

நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக முதலவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020ம் ஆண்டுக்கான 2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் சுமார் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன் மூலமாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி ஆனது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலமாக சுமார் 5 லட்சத்து 85 ஆயிரத்து 241 விவசாயிகள் பயனடைந்து உள்ளனர். இக்கொள்முதல் அளவானது தமிழக வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.
அக்.,1ந்தேதி முதல் தொடங்கிய 2020-2021-ம் ஆண்டு கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1,888 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,868 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டு உள்ளது.
இதனுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70வும் சாதாரண ரகத்திற்கு ரூ.50வும் வழங்கி ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1,958 மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1,918 வழங்கப்படும்.
கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டு உள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னணு எந்திரங்களில் தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அக்.,1ந்தேதி முதல் கொள்முதல் தொடங்கப்பட்டு விட்டது.
அக்.,2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, நேற்று முதல் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையிலேயே கொள்முதல் நடைபெற்று வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் வகையில் இன்று (ஞாயிற்றுகிழமை) அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்களை அரசால் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை எந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலித்தீன் தார்பாய்கள் வழங்கப்பட்டும் உள்ளது.ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே விவசாயிகளிடமிருந்து வருகின்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலைக்கே விற்பனை செய்து பயனடையலாம் என்று தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025