சென்னையில் தேங்கிய மழைநீரை துரித நடவடிக்கை எடுத்து அகற்றிய முதல்வர், தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் வட கிழக்கு பருவமழையை சென்னை எவ்வாறு எதிர்கொள்ளும் என கேள்வி எழுந்தது. இந்த சமயத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் மழைநீர் தேங்கினாலும் ஒரு சில மணி நேரத்தில் மழைநீர் வடிகாலில் மூலம் சென்றது.
இருப்பினும், வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பெரம்பூர், வியாசர்பாடி, பட்டாளம், புளியந்தோப்பு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இதனிடையே, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தமிழக அரசு துரித பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபக்கம், எதிர்க்கட்சிகள் தங்களது குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்ற நிலையில, தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.