கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…
இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தன.
அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டவை, பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகிவிடுகின்றனர்.
இதனால், அவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்குகின்றனர். இது போன்ற சமயங்களில் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கி இருக்கும் நபர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.
அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலைக்கு கூட தூண்டுதலாக அமைகிறது. இதுபோன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும், வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் என்றும், வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதா முன்வரைவு தற்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . அதில் அதிமுக உறுப்பினர்கள் சில திருத்தங்களை கோரியுள்ளனர். அதனை எழுத்துபூர்வாமாக தருமாறு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை வைத்துள்ளார். அதன்பிறகு இந்த சட்ட முன்வரைவு தமிழகசட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். பிறகு அரசாணை வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்படும்.