கொரோனா நெகட்டிவ் எந்நேரத்திலும் பாசிட்டிவாக மாறலாம் – பீலா ராஜேஷ்
கொரோனா வைரஸ் தாக்கவில்லை என பரிசோதனையில் முடிவில் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என்று தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை ரத்த பரிசோதனை செய்யும் போது முதலில் நெகட்டிவ் என்று வந்தாலும் பின்னர் பாசிட்டிவாக எந்த நேரத்திலும் மாறலாம் என கூறியுள்ளார். எனவே கொரோனா சோதனையில் நெகட்டிவ் என்று வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2 ஆம் நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறவில்லை என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
A negative test does not indicate absence of the virus it can turn positive anytime hence need for 28 days quarantine.
— Dr Beela Rajesh IAS (@DrBeelaIAS) April 3, 2020