#BREAKING: கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை – தமிழக அரசு

If the village council meeting is held without the permission of the government, legal action will be taken - Government of Tamil Nadu

அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் நிர்வாக அமைப்பாகும். இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

இது ஊராட்சிகள் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்த நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. கிராம சபை கூட்டுவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை பயன்படுத்தி இது போன்ற அரசியல், பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை திமுக தொடங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node