பாஜக தலைமைக்கு விழுந்த அடுத்த அடி! மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி அதிரடி ராஜினாமா!

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி இன்று (ஜூன் 10) தனது பொறுப்புகளையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

Hero Image

சென்னை : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அமர்பிரசாத் ரெட்டி, இன்று (ஜூன் 10, 2026) தனது பதவியையும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது பதவியிலிருந்து விலகி, 'WE THE LEADERS' (இது நம்ம இயக்கம்) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியதிலிருந்து, அக்கட்சியில் தொடர்ச்சியான அதிருப்தி அலைகள் வீசி வருகின்றன. அண்ணாமலையின் மிக நெருங்கிய ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டியின் இந்த விலகல், பாஜக தலைமைக்கு விழுந்த அடுத்த அடி எனக் கருதப்படுகிறது.

கட்சியில் இருந்து விலகிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமர்பிரசாத் ரெட்டி, தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்:

இது குறித்து அவர் பேசுகையில் " ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருப்பது போல, இன்றைக்குத் தமிழக பாஜகவும் ஒரு சிலரின் (4-5 பேர்) பிடிக்குள் சிக்கியுள்ளது. தோல்வியைச் சந்தித்தாலும், அவர்களே மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் மேலோங்கியிருக்கிறது. உண்மையான தொண்டர்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் அங்கு உரிய மரியாதை இல்லை." எனவும் தெரிவித்தார்.

பாஜகவிலிருந்து விலகிய அமர்பிரசாத் ரெட்டி, விரைவில் அண்ணாமலை தொடங்கியுள்ள 'WE THE LEADERS' இயக்கத்தில் முறைப்படி இணையத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தனது அரசியல் பயணத்தை அந்த புதிய இயக்கத்தின் கீழ் முன்னெடுக்க அவர் தயாராகி வருகிறார்.

அண்ணாமலை விலகிய பிறகு, பாஜகவின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது மாநிலச் செயலாளர் நிலையிலான நிர்வாகியும் விலகியிருப்பது, தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீதான அதிருப்தி உச்சகட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுகிறது.